"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/03/2017

இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?


ஒருவரை நல்லடியார், மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதுபோல் நபி (ஸல்) அவர்களால் கூட, அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர், இவன் கெட்டவன், இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று வஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அதை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்கüல் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பüத்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம். நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும் ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவன் என்று கருதினார்களோ அவன் மறுமையில் கெட்டவானகவும், கெட்டவன் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள். தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால் கண்டுபிடிக்கமுடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நபியவர்கள் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை மட்டும் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள். எனவே நபியவர்களால் கூட நல்லவர் யார். கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

இப்படி நபிகள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவனை, கெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவனை நல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள். ஆக நபியவர்களாலேயே ஒரு மனிதரின் உள்ளத்தில் உள்ளதைக் கண்டறிய முடியவில்லை என்றால் நாம் எப்படி ஒருவரை இவர் அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்? அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபியவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடும். நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும். நபியவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகிவிடும். இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான்,  உஸய்யா,  பனூ  -ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும்,  தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்கüடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி  (ஸல்)  அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் "காரீகள்' (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், "பீரு மஊனா' என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர். உடனே,  நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதில் நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் மகா கெட்டவர்கள் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. 70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. முதலில் வரும்போதே அவர்கள் கெட்டவர்கள் என்று தெரிந்திருந்தால் நபியவர்கள் உஷாராக இருந்திருப்பார்கள். இவர்கள் 70 பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்களா? இல்லையா?

ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை. 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் சாதாரணமான விஷயம் அல்ல. மிகவும் பயங்கரமான விஷயம். கொல்லப்பட்ட 70 ஆட்களும் காரிகள், குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.

நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் நபியவர்களுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கிறது. அதாவது நபியவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள், நல்லவர்கள் என நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள். இது வஹீ வராததின் போது நடந்தது. அந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின் மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்களுடைய கண்ணுக்கு முன்னால் கூட்டிச் சென்ற போது அவர்களுக்குத் தெரியவில்லை. இதிலிருந்தே அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்து கொடுத்தால்தான் மறைவானதைக் கூறுவார்களே தவிர தாமாக அவர்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாது என்பது விளங்குகிறது.

ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவது பெரிய விஷயமே அல்ல. பெரிய தலைப்பாகை, ஜுப்பா போட்டு வந்தால் அவரைப் பார்த்து நாம் ஏமாந்து விடுகிறோம். ஒருவன் பள்ளிவாசலே கதி என்று இருப்பான். நாள் முழுவதும் கையில் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு இருப்பான். அடுத்தவனிடம் பேசாமல் இறைநினைவில் மூழ்கி இருப்பான். 24 மணி நேரமும் குர்ஆனையே ஓதிக் கொண்டிருப்பான். இவ்வாறு செய்பவரை நாம் பார்த்த உடனேயே யோசிக்காமல் நம் ஊருக்கு அவ்லியா வந்து விட்டார் என்று கூறிவிடுவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா?

இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.

"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. ஆகவே அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டார்கள்.  அதற்கு  நபி  (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை'' என்று பதிலüத்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்) அவர்கüடம் வந்தார். நபி  (ஸல்)  அவர்கள் "உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக்  கொண்டு வரச் சொல்- உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகüன் ஓரங்கüல் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப் படவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 3018

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில், அந்தக் கூட்டத்தினர் வந்த நோக்கம் ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளத்தை அறிந்து, இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் பலி கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.

நாமும் இவ்வாறு தான் கண்டுபிடிக்க முடியும். நமக்கு ஒருவன் துரோகம் இழைக்க நினைக்கிறான் என்றால், கடைசி நிமிடம் வரைக்கும் நமக்கு இவன் துரோகம் இழைப்பான் என்று நம்மால் அறிய முடியாது. துரோகம் இழைத்த பிறகு தான் இவன் துரோகி என்று நம்மால் கண்டறிய முடிகிறது. அல்லாஹ்வுடைய தூதரையே இவ்வளவு எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள் என்றால், நம்மை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும். அதிலும் குறிப்பாக அவர்கள் நபித்தோழர்களைப் போல் நடித்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்த கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விக்கு இன்னும் பதிலைக் காணோம்.

இவ்வாறு ஒருவரை அவ்லியா என்று சொல்ல, அல்லாஹ்வுடைய அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டுமா? நாம் அல்லாஹ்விடம் பாவியாக வேண்டுமா? இப்படி நாம் சிந்திக்க வேண்டும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம், யாராலும் அவ்லியாவை கண்டுபிடிக்க முடியாது என்பது தான்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பüப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி-ருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்கüடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கüன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: புகாரி 2617

இந்தச் செய்தியில், தன்னைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி வந்த ஆளையே நபியவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லவள் என நம்பித்தான் அந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே நம்மிடத்தில் வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம்மிடம் நல்லவனாக முடியும். ஆனால் அல்லாஹ்விடத்தில் வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்து, உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால்தான் அவன் நல்லவனாக முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, "நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாüல் (நபிமார்கüல்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்கüல் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, "தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகüன் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது, நல்லடியார் (ஈஸா நபி) கூறியதைப் போல், "நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அüத்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்'' என்னும் (5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.
நூல்: புகாரி 3349

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் "நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)கலின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டே யிருந்தார்கள்'' என்று கூறப்படும். (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள்தாம்'' என்று நபியவர்கள் கூறியதற்கு, "உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். உடனே நான், "எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப் படுத்துவானாக!'' என்று சொல்வேன். (புகாரி 7051) என்று இடம்பெற்றுள்ளது.

மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம்  நல்லடியார்கள் என்று நினைத்து, அதே நிலையில் நபியவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். நபியவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அதை மறுமையில் வெளிப்படுத்தும் போது அது பொய்யென்று ஆகிவிடுகின்றது.

அதே மாதிரி மூஸா (அலை) அவர்களுடைய சம்பவத்தையும் நாம் இதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடத்தில் சென்று அழைப்பு பணி செய்கிறார்கள். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது,

"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான். "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.  அல்குர்ஆன் 20:49-52

இவ்வசனத்தில் ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்களிடம், "நீ புதிய மார்க்கத்தைச் சொல்கிறாய். ஆனால் இதற்கு முன்னால் சென்ற நம்முடைய அப்பன், பாட்டன்மார்கள், முன்னோர்களுடைய நிலை என்ன? அவர்களெல்லாம் நீ சொன்ன மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே? அவர்களுடைய கதி என்ன?' என்று ஃபிர்அவ்ன் கேட்கிறான். அதற்கு மூஸா நபியவர்கள் "அதைப் பற்றி எனக்கு எந்த ஞானமும் கிடையாது. அது அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளதாகும். அது அவன் எடுக்க வேண்டிய முடிவு. அவனுடைய முடிவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என்று கூறிவிடுகின்றார்கள். இதுதான் முஸ்லிம்களுடைய நிலைபாடாகவும் இருக்க வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

--- ஏகத்துவம் நவம்பர் 2012

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்